Sunday, January 6, 2013

06.01.2013

ஆண்டவரின் திருக்காட்சி

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6

எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.

உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்�

திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!
உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. -பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக;
நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்;
பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். -பல்லவி

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்;
சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.
11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்.
எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். -பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.
13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்;
ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். -பல்லவி
திருப்பாடல் 72: 1-2, 7-8, 10-13
"ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்"
இன்றைய விழாவுக்குப் பொருத்தமான ஒரு திருப்பாடலைப் பதிலுரைப் பாடலாகச் செபிக்கிறோம். ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவாகிய இன்று, குழந்தை இயேசுவைத் தேடி கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து வணங்கிய நிகழ்வைக் கொண்டாடி, மெசியாவாம் இயேசு புற இனத்தாருக்கும் தம்மை வெளிப்படுத்தியதை நினைவுகூர்கிறோம்.
எனவே, இந்த நாளில் "ஆண்டவரே, எல்லா இனத்தாரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்" என்ற பல்லவியைப் பாடுவது பொருத்தமானதே.
திருப்பாடல் 72 ஓர் அரச திருப்பாடல், அதாவது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் அரசர்களின் பெருமைகள், அவர்களின் அரியணை ஏறுதல் போன்ற விழாக்களைப் புகழ்ந்து பாடிய பாடல்கள். இந்தப் பாடல்கள் பின்னர் மெசியாமீது ஏற்றிப் புரிந்துகொள்ளப்பட்டன. திருப்பாடல 72 "அரசருக்காக மன்றாடல்" எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. "சாலமோனுக்கு உரியது" என அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
இந்தத் திருப்பாடலைக் கூர்ந்து வாசித்தால், அரசன் சாலமோனுக்காக (அல்லது ஏதோ ஓர் இஸ்ரயேல் அரசனுக்காக) இறைவனை மன்றாடி பாடப்பட்ட பாடல் என்பது தெளிவாகும். ஆனால், பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் ஒளியில் புதிய பொருள் பெறுகிறது என்னும் மீட்பின் பார்வையில் இயேசுவே அந்த அரசர் என இன்றைய விழாவில் நாம் புரிந்துகொள்கிறோம்.
"தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள். சேபாவிலும், செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்" (72:10-11) என்னும் வரிகள் இன்றைய விழாவுக்கு நன்கு பொருந்துகின்றன. கீழ்த்திசை ஞானிகள் "நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்" என்ற நற்செய்தி வாசக வரிகள் இத்திருப்பாடல் வரிகளின் நிறைவாக அமைகின்றன.
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகன் இயேசுவை எல்லா இனத்தாரும் வணங்குவர் என்னும் மறையுண்மையை இன்று நாங்கள் கொண்டாடி உம்மைப் போற்றுகிறோம். எல்லா இனத்தாரும் இயேசு வழியாக உமக்கு ஊழியம் செய்வார்களாக, ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா



இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3, 5-6


சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.
மத்தேயு 2:1-12
மூவரசர் திருவிழா

நற்செய்தி வாசகம்�

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, �யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்'' என்றார்கள்.

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், �யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.

ஏனெனில், `யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இi றவாக்கினர் எழுதியுள்ளார்'' என்றார்கள்.

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், �நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்'' என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
யூதேயாவிலுள்ள பெத்லகேம் மெசியாவின் பிறப்பிடம் தான்! அனைத்தையும் கடந்த கடவுள் மனிதனாய் வருவதென்றால் ஒரு குறித்த காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் கால்பதிக்க வேண்டும் அல்லவா? ஆயினும் இந்த மெசியா யூதரின் அரசர் என அழைக்கப்பட்டாலும், அனைத்துலகின அரசர், எல்லா இனங்களையும் தன் ஆளுமையால், தன் அதிகாரத்தால், தன் வார்த்தையால், தன் மரணம், உயிர்ப்பால் ஒன்றினைக்கக் கூடியவர். இறைவனின் ஒளி எல்லா இனங்களின் மேலும் ஒளிச் செய்ய தோன்றியவா என்பைதை தேடி வந்து ஞானியர் அனுபவத்த தரிசனமும். வெளிப்பாடும, தேன்றி வழநடத்திய சிறப்பு விண்மீனும் வெளிப்படுத்துகின்றன.
பணி. மைக்கிள் மரியதாஸ் cmf.

No comments:

Post a Comment