Thursday, January 10, 2013



திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன்
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 19-5: 4

அன்பார்ந்தவர்களே, கடவுளே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம். கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை. இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 14-15. 17

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!
உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! -பல்லவி

14 அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்;
அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது.
15bஉ அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக!
அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! -பல்லவி

17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக!
கதிரவன் உள்ள வரையில் அவர் பெயர் நிலைப்பதாக!
அவர் மூலம் மனிதர் ஆசி பெற விழைவராக!
எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.


லூக்கா 4:14-22
வியாழன்
நற்செய்தி வாசகம்

+
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 14-22

அக்காலத்தில் இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர். இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'' பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
இணையதள உறவுகளே
இன்றைய கால கட்டத்தில் நாம் பல இறை வாக்குகளைக் கேட்கிறோம், படிக்கிறோம். நமக்கென கடவுளால் தந்த வசனம் என பெருமை பாராட்டிக்கொள்வோம்.ஆனால் அந்த வாக்குக்கு ஏற்ப, பெருமைக்கு ஏற்ப வாழ்கிறோமா? என்னில் இந்த இறை வாக்கு இன்று நிறைவேறிற்று என்று மார்தட்டி சொல்ல முடியுமா? அனைவருடைய கண்களும் நம்மையே உற்றுநோக்கிய வண்ணம் உள்ளதா?
இயேசுவின் போதனைகளில் உன்னைக் கவர்ந்தது என்ன? அவரது செயல்களில் உனக்கு எதில் நாட்டம் அதிகம். இயேசுவின் போதனைகளை, சாதனைகளை இன்று சாதித்துக் காட்டும் சாதனையாளர்கள் உன் கண்ணில்பட்டதுண்டா? உன் மனத்தில் என்ன தாக்கத்தை அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்?
இத்தகு தாக்கத்தை ஏற்படுத்துவராக நாம் மாறவேண்டும். இத்தகைய சமுதாய தாக்கங்களை ஏற்படுத்துவர்களை நாம் பாராட்ட வேண்டும். இதைத்தான் நாசரேத்து செபக்கூடத்தில் இயேசு செய்தார். அங்கு இருந்தவர்களும் செய்தார்கள். புதிய புரட்சி சமுதாயம் உருவாகியது. நாமும் செய்வோம்.
-ஜோசப் லீயோன்

No comments:

Post a Comment